![கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஜனவரி வரை ரூ.953 கோடி கூடுதல் வருவாய்: பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் | Rs 953 crore more revenue till January this year than last year Registration Minister கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஜனவரி வரை ரூ.953 கோடி கூடுதல் வருவாய்: பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் | Rs 953 crore more revenue till January this year than last year Registration Minister](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/06/xlarge/1194862.jpg)
![கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஜனவரி வரை ரூ.953 கோடி கூடுதல் வருவாய்: பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் | Rs 953 crore more revenue till January this year than last year Registration Minister கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஜனவரி வரை ரூ.953 கோடி கூடுதல் வருவாய்: பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் | Rs 953 crore more revenue till January this year than last year Registration Minister](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/06/xlarge/1194862.jpg)
சென்னை: கடந்தாண்டு ஜனவரி வரையிலான காலத்தை ஒப்பிடும்போது இந்தாண்டு ஜனவரி வரை பதிவுத்துறையில் ரூ.952.86 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், கடந்த ஜனவரி மாதத்துக்கான பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழக அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்த 2023-ம்ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தை ஒப்பிடும்போது, இந்தாண்டுஜனவரி வரையிலான காலத்தில் கூடுதலாக ரூ.952.86 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
எனவே, துணைப் பதிவுத்துறை தலைவர்கள் அனைவரும் பதிவுத்துறைக்கு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடையும் வகையில்,சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய வேண்டும். பதிவுத்துறை செயலாளர் இழப்பினை வசூலிக்கவும், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின்கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை தொய்வின்றி வசூலித்து அரசுக்கு வரவேண்டிய வருவாயைப் பெருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டத்தில் துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் அ.முகமது ஜாபர் சாதிக், வே.நல்லசிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.