![ODI WC 2023 | இந்தியா – நியூஸிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? | World Cup 2023 Semi-finals: What happens if rain interrupts the match ODI WC 2023 | இந்தியா – நியூஸிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? | World Cup 2023 Semi-finals: What happens if rain interrupts the match](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/14/xlarge/1153243.jpg)
![ODI WC 2023 | இந்தியா – நியூஸிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? | World Cup 2023 Semi-finals: What happens if rain interrupts the match ODI WC 2023 | இந்தியா – நியூஸிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? | World Cup 2023 Semi-finals: What happens if rain interrupts the match](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/14/xlarge/1153243.jpg)
மும்பை: 2023 உலகக் கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது, நாளை (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி மீண்டுமொரு முறை நாக்-அவுட் சுற்றில் நியூஸிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்ட இந்தியா இம்முறை அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது. இதேபோல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா நவம்பர் 16-ம் தேதி எதிர்கொள்கிறது. இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா – நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது. இதனால், ரிசர்வ் டே மூலமாக மறுநாள் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதின. ரிசர்வ் டே பலனால் நியூஸிலாந்து அப்போட்டியை வென்று பைனலுக்கும் சென்றது. தற்போதைய உலகக் கோப்பை அரையிறுதியிலும் மழை குறுக்கிடும் பட்சத்தில் ரிசர்வ் டே உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ரிசர்வ் டே-யில் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அப்போட்டி தொடங்கும். ரிசர்வ் டே தினத்திலும் மழை பெய்யும் பட்சத்தில் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அந்த வகையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் நியூஸிலாந்து வெளியேறி, இந்திய அணி பைனலுக்கு முன்னேறும். ஏனென்றால், லீக் போட்டிகளில் இந்திய அணி 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் நிலையில், நியூஸிலாந்து 10 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் தடைபட்டு, இரண்டு அணிகளும் ஒரே புள்ளிகளை பெற்றிருக்கும் பட்சத்தில் நெட் ரன் ரேட் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதும் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் தலா 14 புள்ளிகளை பெற்றுள்ளன. இதனால் இந்த அணிகள் மோதும் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் நெட் ரன் ரேட் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்கள். தென் ஆப்பிரிக்காவின் நெட் ரன் ரேட் +1.261 ஆகவும், ஆஸ்திரேலியாவின் நெட் ரன் ரேட் +0.841 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் மழையால் ஆட்டம் தடைபட்டாலும் இதே நிபந்தனைகள்தான் என்பது குறிப்பித்தக்கது.