![AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை – ஏஐ கருவிகள்! | AI universe series chapter 2 Super Hero Villain Classic inventions AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை – ஏஐ கருவிகள்! | AI universe series chapter 2 Super Hero Villain Classic inventions](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/09/xlarge/1088314.jpg)
![AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை – ஏஐ கருவிகள்! | AI universe series chapter 2 Super Hero Villain Classic inventions AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை – ஏஐ கருவிகள்! | AI universe series chapter 2 Super Hero Villain Classic inventions](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/09/xlarge/1088314.jpg)
செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனின் பரவல் காட்டுத் தீயை விட அதிவேகமாக உள்ளது. மனிதர்கள் அதன் மீது காட்டி வரும் ஆர்வம் அதற்கு காரணம். அதனால், நாள்தோறும் ஏஐ சார்ந்த புதுப்புது வினோதங்களை கண்ணெதிரே பார்த்து வருகிறோம்.
ஏஐ தொழில்நுட்பத்தை கையாளும் மக்களுக்கும், அதனால் வேலையை இழக்கும் மக்களுக்கும் இடையே பனிப்போர் தொடங்கி உள்ளது. அநேகமாக இதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கும், செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கும் இடையிலான யுத்தமாக கூட இருக்கலாம். இப்போதைக்கு நாம் ஓரளவுக்கு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் வீடு, கல்விக் கூடம், அலுவலகம் என எங்கும் எதிலும் ஏஐ கண்டுபிடிப்புகள் நம்மை சூழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதை நாம் சற்றே விழிப்புடன் கடக்க வேண்டியுள்ளது. வரும் நாட்களில் பல்வேறு கண்டுபிடிப்புகள், கருவிகள் வழியில் நம் வாழ்வில் ஆச்சரியங்களையும், அதே நேரத்தில் அதிர்ச்சியையும் ஏஐ அள்ளி தரலாம். அப்படி என்னென்ன செய்யும் என்பதை பார்ப்போம்.
ஏஐ Body ஸ்கேனிங்: இந்த வகை தொழில்நுட்பம் மனிதர்களின் உடலை அப்படியே விரிவாக ஸ்கேன் செய்து டிஜிட்டல் குளோனை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவுவதாக சொல்லப்படுகிறது. இது ராணுவம் மற்றும் திரைத்துறையில் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நடிகர்களின் வயதை குறைத்துக் காட்ட, ரியலிஸ்டிக் அனிமேஷன் பேக்ரவுண்டை உருவாக்க, நடிகர்களின் நடிப்பை ரீ-ஷூட் செய்யாமல் மேம்படுத்த உதவும் எனத் தெரிகிறது.
ஏஐ கண் கண்ணாடி: எதிரில் இருப்பவர்கள் சொல்வது மெய்யா என்பதை அறியலாம் – ஏஐ தொழில்நுட்பத்தின் துணையுடன் இது சாத்தியம் என்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் டெவின் லிடெல். கண்ணாடியில் கட்டமைக்கப்பட்ட கணினி பார்வையின் ஊடாக எதிரில் இருக்கும் மன ஓட்டத்தை அவர்கள் கண்கள் வழியில் அடையாளம் காணலாம் என அவர் தெரிவித்துள்ளார். இது விரைவில் கூட மனித பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஃபேஸ் டிடெக்ஷன் போலவே இது இயங்கும் சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவில் ஏர்டெல் டெலிகாம் நிறுவன சிம் கார்டை வாங்க வேண்டுமென்றால், அதை விற்பனை செய்யும் இடத்துக்கு நேரில் சென்று, போட்டோ எடுக்கும் போது கண்களை மூடி திறந்தால் மட்டுமே சிம் கார்டு பெற முடியும். இது தொழில்நுட்பத்தின் உதவியால் சாத்தியமாகி உள்ளது. அது போல வரும் நாட்களில் ஏஐ திறன் பெற்ற கண்ணாடி பயன்பாட்டுக்கு வரலாம். இது ஒரு சூப்பர் பவர் என லிடெல் சொல்கிறார்.
ஏஐ ரோபோ ஃபிஷ்: ஆழ்கடல் சூழலை அங்கு வாழும் உயிரினங்களுக்கு எந்தவித தீங்கும் இல்லாமல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய உதவுகிறது ‘Belle’ எனும் ஏஐ ரோபோ ஃபிஷ். ஏஐ துணையுடன் இது வழி நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஆழ்கடலில் புதைந்து இருக்கும் டிஎன்ஏ மாதிரி மின்னணு முறையில் சேகரிக்கப்படுகிறது. இதனை சுவிட்சர்லாந்து நாட்டு பொறியியல் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
பொது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் ஏஐ எந்திரம்: சோமேட்டிக் எனும் வணிக நோக்கில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் ஏஐ எந்திரத்தை வடிவமைத்துள்ளது. உயர் தரமான சுத்தத்துக்கு இந்த பாட் உத்தரவாதம் தருகிறது. இதற்கான கட்டணம் மாதத்துக்கு 82,000 ரூபாய். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்துக்கு 40 மணி நேரம் வீதம் வேலை செய்யுமாம். இது போல கழிவுநீர் தொட்டிகளில் மனித கழிவுகளை சுத்தம் செய்யவும் ஏஐ எந்திரம் வேண்டும்.
ஏஐ மைக்ரோ சிப்: துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் தனது கைக்குள் சிப் ஒன்று வைத்து கொள்வார். அதுபோல ஏஐ திறன் கொண்ட மைக்ரோ சிப் ஒன்றை நம் உடலுக்குள் பொருத்திக் கொண்டு, அதன் வழியே பேமென்ட் செலுத்த உதவுகிறது Walletmor எனும் பிரட்டன்-போலந்து நிறுவனம். பயோ பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிப், அரிசி மணியை விட சற்றே பெரிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ட்ரெண்ட் ஜப்பான் நாட்டில் தொடக்க நிலையில் இருப்பதாக தகவல். வரும் நாட்களில் வீட்டு சாவி, கார் சாவி என பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த சிப்கள் வடிவமைக்கப்படலாம்.
ஏஐ துணை கொண்டு இயங்கும் மின்சார காலணி: மனிதர்கள் இயல்பை காட்டிலும் வேகமாக நடக்க மூன்வாக்கர் எனும் மின்சார காலணியை ஷிப்ட் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் இயல்பான நடை வேகத்தை விடவும் 2.5x வேகத்தில் நடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக் மோட் மற்றும் ஷிப்ட் மோட் என இரண்டு மோட் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏஐ மூலம் இயங்குகிறதாம்.
இதே போல விவசாயிகளுக்கு உதவும் ஏஐ திறன் கொண்ட களை அறுக்கும் கருவி, நீர் தெளிக்கும் கருவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏஐ விலங்கு ஹைபிரிட் சிப்பாய், ஏஐ மூளை ட்ரேக்கர், ஏஐ Brain Extension என பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
| தொடர்வோம் |
முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 1: அஃறிணையின் நுண்ணறிவுத் திறன் – ஓர் அறிமுகம்