
சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் வைக்கப்பட்ட பெரியார் உருவப்படத்துக்கு ஒபிஎஸ் மரியாதை செலுத்தியதால், அந்த உருவப்படத்துக்கு மரியாதை செலுத்த மறுத்த அதிமுகவினர், வேறொரு பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். இதனால், அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு, தமிழக பொதுப் பணித்துறை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த சிலைக்கு அதிமுக தரப்பிலும், ஓபிஎஸ் அணி தரப்பிலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தரப்பிலும் மாியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.