State

“நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிக்கு முழு ஆதரவு” – முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin written letter to kerala cm pinarayi vijayan

“நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிக்கு முழு ஆதரவு” – முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin written letter to kerala cm pinarayi vijayan
“நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிக்கு முழு ஆதரவு” – முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin written letter to kerala cm pinarayi vijayan


சென்னை: மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டுக்கள். மத்திய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது.

மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்தப் பிரிவின்படி, மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023-2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவதாக, மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி, மாநில மின் விநியோக நிறுவனங்களின் (DISCOMs) மொத்த இழப்புக்கு நிதியளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையால், நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது., இது இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்திலும் மாநிலங்களை பாதிக்க வாய்ப்புள்ளது.

மூன்றாவதாக, மத்திய அரசின் திட்டமான, சென்னை மெட்ரோ இரயில் 2 ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில், இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

இதனால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது என்றும், இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும்.

நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழக அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *