![துரைசாமி மகனை தேடும் பணியில் கடற்படை நீச்சல் வீரர்கள் தீவிரம்: நதியில் கிடந்த சூட்கேஸ்கள் மீட்பு துரைசாமி மகனை தேடும் பணியில் கடற்படை நீச்சல் வீரர்கள் தீவிரம்: நதியில் கிடந்த சூட்கேஸ்கள் மீட்பு](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3546571.jpg)
![துரைசாமி மகனை தேடும் பணியில் கடற்படை நீச்சல் வீரர்கள் தீவிரம்: நதியில் கிடந்த சூட்கேஸ்கள் மீட்பு துரைசாமி மகனை தேடும் பணியில் கடற்படை நீச்சல் வீரர்கள் தீவிரம்: நதியில் கிடந்த சூட்கேஸ்கள் மீட்பு](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3546571.jpg)
சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி, 45, இவரது நண்பர் கோபிநாத், 32, ஆகியோர் சென்ற கார், ஹிமாச்சல பிரதேசம், சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
விபத்து நடந்த இடத்தில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், 32 என்பவர், தலையில் பலத்த காயம் மற்றும் உடலின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தற்போது, சிம்லா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நொறுங்கி கிடந்த காரை மீட்ட போது, அதில் இறந்த நிலையில், ஓட்டுனர் தன்ஜின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், காரில் பயணம் செய்த, சென்னை சி.ஐ.டி., நகர் பிரதான சாலையைச் சேர்ந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி, 45, நதியில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுகிறது.
தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட சாதகமான சூழல் இல்லை; பனிப்பொழிவு அதிகம் உள்ளது. தகவல் கிடைத்த நாளில் இருந்து, போலீசார், ஊர்காவல் படையினர், சிம்லாவில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், படகு உள்ளிட்ட உபகரணங்கள் வாயிலாக, வெற்றியை தேடி வருகின்றனர்.
நதிக்கரை ஓரத்தில் உள்ள பாறை இடுக்கில் சில உடல் பாகங்கள், மனித மூளையின் பகுதிகள் சிதறிக் கிடந்தன. மீட்கப்பட்ட கோபிநாத்திற்கு தலையில் காயம் உள்ளது. இறந்து போன தன்ஜின் தலையில், மூளை வெளியே வரும் அளவுக்கு காயங்கள் இல்லை.
இதனால், சிதறிக் கிடந்த மூளையின் பகுதிகள், வெற்றியினுடையதாக இருக்கலாம் என, நம்புகிறோம். இதனால், டி.என்.ஏ., என்ற மரபணு சோதனைக்காக, மாநில தடய அறிவியல் நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக தந்தையின் ரத்த மாதிரி எடுத்து, டி.என்.ஏ., சோதனையை விரைந்து நடத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெற்றியை தேடும் பணியில், கடற்படையின், ‘ஸ்கூபா டைவ்’ நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நதியில் மூழ்கி கிடந்த வெற்றி, கோபிநாத் ஆகியோரின் மூன்று சூட்கேஸ்களை வெளியே எடுத்துள்ளனர். இதற்கு, ‘எஸ்.ஏ.ஆர்., ஆப்பரேஷன்’ என, பெயரிட்டுள்ளனர்.