![தமிழகம் உள்ளிட்ட 7 மாநில உயர் அதிகாரிகளுடன் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை | consultation with top officials 7 states including tn regard Lok Sabha election தமிழகம் உள்ளிட்ட 7 மாநில உயர் அதிகாரிகளுடன் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை | consultation with top officials 7 states including tn regard Lok Sabha election](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/10/xlarge/1151516.jpg)
![தமிழகம் உள்ளிட்ட 7 மாநில உயர் அதிகாரிகளுடன் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை | consultation with top officials 7 states including tn regard Lok Sabha election தமிழகம் உள்ளிட்ட 7 மாநில உயர் அதிகாரிகளுடன் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை | consultation with top officials 7 states including tn regard Lok Sabha election](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/10/xlarge/1151516.jpg)
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பொதுத் தேர்வுமற்றும் விழாக்கள் குறித்து 7 மாநில உயரதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அடுத்த ஆண்டு நாடு முழுவதும்நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தேவையானமுன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்போது, தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட 5மாநில சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலங்களில் தேர்தல்வாக்குப் பதிவு முடிந்து வரும் டிச.3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இப்பணிகள் முடிந்த பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் இன்னும் விறுவிறுப்படையும். குறிப்பாக 5 மாநில தேர்தல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு இவற்றுக்குப் பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், மண்டல வாரியாக அதிகாரிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில்,தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும்புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நேற்று சென்னையில் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
மண்டல அளவிலான மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், மூத்த துணை தேர்தல் ஆணையர் மற்றும் மக்களாட்சி, தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேசப் பயிற்சி நிறுவன தலைமை இயக்குநர் தர்மேந்திர சர்மா, மூத்த துணைத் தேர்தல் ஆணையர் நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர் மனோஜ்குமார் சாஹூ, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் வத்சவா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹூ, தமிழக காவல்துறை ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், இதர மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை பொறுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், இக்கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வாக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுதவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசு விடுமுறை, மாவட்ட உள்ளூர் விடுமுறைகள், பண்டிகை விழாக்கள், பள்ளி,கல்லூரி தேர்வுகள், போட்டித் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் இக்கூட்டத்தில் பெறப்பட்டு, அவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைப்போல், இந்த தேர்தலையும் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும்12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை அடிப்படையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுக்கான பணிகள்முடிந்ததும், ஏப்ரல் மாதம் தேர்தலைநடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:
மக்களவைத் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன.முதல்கட்டமாக அவற்றை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளோம். தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சட்டம், ஒழுங்கு: தமிழகத்தை பொறுத்தவரை, சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏதும்இல்லை என்பதை கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். அதேபோல் மற்றமாநிலங்களின் அதிகாரிகளிடமும் சட்டம், ஒழுங்கு குறித்து கேட்டறிந்தனர். மாநிலங்களின் சூழல் அடிப்படையில் பொதுவான பல்வேறுஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். மாவட்ட வாரியாக தேவைப்படும் காவல்துறையினர், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்த எண்ணிக்கை அடிப்படையில் போதிய பாதுகாப்பு வசதிகள் கோரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.