![தனிநபர் விவரம் கசிவு: ChatGPT-க்கு அபராதம் விதித்தது தென் கொரியா | south korea imposes fine on chatgpt open ai chatbot தனிநபர் விவரம் கசிவு: ChatGPT-க்கு அபராதம் விதித்தது தென் கொரியா | south korea imposes fine on chatgpt open ai chatbot](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/28/xlarge/1069935.jpg)
![தனிநபர் விவரம் கசிவு: ChatGPT-க்கு அபராதம் விதித்தது தென் கொரியா | south korea imposes fine on chatgpt open ai chatbot தனிநபர் விவரம் கசிவு: ChatGPT-க்கு அபராதம் விதித்தது தென் கொரியா | south korea imposes fine on chatgpt open ai chatbot](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/28/xlarge/1069935.jpg)
சியோல்: சாட்ஜிபிடி (ChatGPT) செய்த வேலைக்காக ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு சுமார் 2.32 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது தென் கொரியா. இதை அந்நாட்டின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலான டிஜிட்டல் சாதன பயனர்களின் பார்வையை பெற்றுள்ளது சாட்ஜிபிடி. கதை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத, கம்ப்யூட்டர் கோடிங் என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். ஓபன் ஏஐ நிறுவனம் வடிவமைத்த இந்த சாட்பாட் கடந்த ஆண்டு அறிமுகமானது.
இந்தச் சூழலில், சாட்ஜிபிடி பிளஸ் கட்டண சந்தா பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளன. பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, கிரெடிட் கார்டின் கடைசி நான்கு எண்கள், அதன் காலாவதி தேதி மற்றும் பேமென்ட் தகவல் போன்றவை இதில் அடங்கும். அதில் சுமார் 687 தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பயனர்களும் இருப்பதாக தெரிகிறது. அதை உறுதி செய்த பின்னர் அந்நாட்டின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு 2.32 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதற்குக் காரணம், சாட்ஜிபிடி-யின் ஓபன் சோர்ஸ் லைப்ரரியில் ஏற்பட்ட பிழை என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் கசிவு குறித்து தங்களிடம் ஓபன் ஏஐ தெரிவிக்க தவறியதற்காக அந்த ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
அதேபோல பயனர்களுக்கு தெரியாமல் அவர்களது தனிநபர் தகவல்களை சேகரித்த விவகாரத்தில் மெட்டா நிறுவனத்துக்கு கூடுதலாக 7.4 பில்லியன் சவுத் கொரியன் வொன் (ரூ.4.7 கோடி) அபராதம் விதித்துள்ளது இந்த ஆணையம். கடந்த செப்டம்பரில் மெட்டாவுக்கு தென் கொரியா 30.8 பில்லியன் சவுத் கொரியன் வொன் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.