
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் கேகர்நாக் அருகே காடோல் வனப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் கடந்த 13 ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூவர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்தின் ஹத்லங்கா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.