![செயற்கை நுண்ணறிவு: தயார் ஆகும் 20 லட்சம் இந்தியர்கள், இந்தியா செய்திகள் செயற்கை நுண்ணறிவு: தயார் ஆகும் 20 லட்சம் இந்தியர்கள், இந்தியா செய்திகள்](https://static1.tamilmurasu.com.sg/s3fs-public/articles/2024/02/07/satya-nadella-1_2.jpg)
![செயற்கை நுண்ணறிவு: தயார் ஆகும் 20 லட்சம் இந்தியர்கள், இந்தியா செய்திகள் செயற்கை நுண்ணறிவு: தயார் ஆகும் 20 லட்சம் இந்தியர்கள், இந்தியா செய்திகள்](https://static1.tamilmurasu.com.sg/s3fs-public/articles/2024/02/07/satya-nadella-1_2.jpg)
புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவுத் துறையில் செயல்படுவதற்கேற்ப இந்தியாவில் சுமார் 20 லட்சம் பேரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தயார்படுத்த இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வேலை வாய்ப்புகள் இந்தியாவில் பெருகும் என்று அவர் கூறியுள்ளார்.
“செயற்கை நுண்ணறிவானது இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு உதவும் என்றும் இந்தியாவில் ஏற்கெனவே பல நிறுவனங்கள் தங்களின் நன்மை கருதி செயற்கை நுண்ணறிவுத் திறனை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும்போதுதான் ஒரு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அர்த்தமுள்ளதாகிறது.
“தற்போதுள்ள சந்தையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஏராளமான சாத்தியங்கள் உள்ளன. எனவே, 2025ஆம் ஆண்டுக்கான நமது லட்சிய இலக்குகள் உற்சாகம் அளிக்கின்றன.
“இந்த வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்,” என்று சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார்.
பொருளியல் நிலையை மாற்றியமைக்கக்கூடிய ஆற்றல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு உண்டு என்றார் அவர். எனவே எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு இத்துறையில் முதலீடுகளைச் செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சத்ய நாடெல்லா கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் ஆக்கபூர்வமான அம்சங்களை ஏற்றுக்கொண்ட பின்னர் அதன் தொடக்க நிலையும், அதன் வேகமான வளர்ச்சியும் தமக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாக சத்ய நாதெல்லா தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்வது மிக அவசியம்.
“ஏனெனில் ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை புதிய தொழில்நுட்பங்கள் பெரிதும் மேம்படுத்தும். எனவே அவற்றை நம்பி முதலீடுகளை அதிகப்படுத்தலாம்,” என்று சத்ய நாடெல்லா கூறியுள்ளார்.