![சென்னையில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது; 3 பெண்கள் மீட்பு | 2 persons arrested for engaging in sexual activity in a massage center in DP Chatram area சென்னையில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது; 3 பெண்கள் மீட்பு | 2 persons arrested for engaging in sexual activity in a massage center in DP Chatram area](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/09/xlarge/1196498.jpg)
![சென்னையில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது; 3 பெண்கள் மீட்பு | 2 persons arrested for engaging in sexual activity in a massage center in DP Chatram area சென்னையில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது; 3 பெண்கள் மீட்பு | 2 persons arrested for engaging in sexual activity in a massage center in DP Chatram area](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/09/xlarge/1196498.jpg)
சென்னை: சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னையில் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, K-6 டி.பி.சத்திரம் காவல நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (08.02.2024), கீழ்பாக்கம் கார்டன், பெரிய தெருவிலுள்ள அரோமா ஆயுர் கேர் சென்டர் என்ற மசாஜ் சென்டரை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சரவணன்(27), ராபின்(26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சரவணன் மற்றும் ராபின் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (08.02.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.