![சனல் குமார் இணையத்தில் வெளியிட்ட ‘வழக்கு’ திரைப்படம்: மலையாள திரையுலகினர் கொந்தளிப்பு | Film fraternity condemns Sanal Kumar Sasidharan’s impulsive action over Vazhakku சனல் குமார் இணையத்தில் வெளியிட்ட ‘வழக்கு’ திரைப்படம்: மலையாள திரையுலகினர் கொந்தளிப்பு | Film fraternity condemns Sanal Kumar Sasidharan’s impulsive action over Vazhakku](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/05/15/xlarge/1247887.jpg)
![சனல் குமார் இணையத்தில் வெளியிட்ட ‘வழக்கு’ திரைப்படம்: மலையாள திரையுலகினர் கொந்தளிப்பு | Film fraternity condemns Sanal Kumar Sasidharan’s impulsive action over Vazhakku சனல் குமார் இணையத்தில் வெளியிட்ட ‘வழக்கு’ திரைப்படம்: மலையாள திரையுலகினர் கொந்தளிப்பு | Film fraternity condemns Sanal Kumar Sasidharan’s impulsive action over Vazhakku](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/05/15/xlarge/1247887.jpg)
திருவனந்தபுரம்: இயக்குநர் சனல் குமார் சசிதரன் ‘வழக்கு’ மலையாள படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரின் இந்த செயல்பாடு மலையாள திரையுலகினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘வழக்கு’ மலையாள படம் கேரள திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த முடிவில் இயக்குநர் சனல்குமாருக்கும், நடிகரும் தயாரிப்பாளருமான டோவினோ தாமஸூக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் உச்சகட்டமாக படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் சனல் குமார். இது மலையாள திரையுலகில் சர்ச்சையையும், படத்தின் மீதான உரிமை குறித்த விவாதத்தையும் எழுப்பியுள்ளது. தயாரிப்பாளரின் அனுமதியின்றி படத்தை வெளியிட்டதற்கு பலரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். ரூ.27 லட்சம் பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் முதன்மை தயாரிப்பாளர் டோவினோ தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கேரள பிலிம் சேம்பர் பொதுச் செயலாளர் சஜி நந்தியாட்டு கூறுகையில், “கேரள பிலிம் சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு படத்துக்கு தயாரிப்பாளர் தான் உரிமையாளர். இந்த விவகாரத்தில் படத்தை பொதுவெளியில் வெளியிட்டு இயக்குநர் சனல் குமார் பெரிய ரிஸ்கை எடுத்துள்ளார். இது படத்தின் திரையரங்க அல்லது ஓடிடி வெளியிட்டை பெருமளவில் பாதிக்கும். இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்” என்றார்.
தயாரிப்பாளரைக் கேட்காமல் இயக்குநரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முழு படத்தையும் வெளியிட்டுள்ளது மலையாள திரையுலகில் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சனல்குமார் வெளியிட்ட படத்தின் லிங்கை க்ளிக் செய்து பார்த்தால், அது ‘காப்பிரைட்’ பிரச்சினை காரணமாக நீக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.