![“கோவை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறி” – அண்ணாமலை | Law and order question mark in Tamil Nadu: Annamalai “கோவை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறி” – அண்ணாமலை | Law and order question mark in Tamil Nadu: Annamalai](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/12/xlarge/1122220.jpg)
![“கோவை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறி” – அண்ணாமலை | Law and order question mark in Tamil Nadu: Annamalai “கோவை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறி” – அண்ணாமலை | Law and order question mark in Tamil Nadu: Annamalai](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/12/xlarge/1122220.jpg)
சென்னை: “கோவையில் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராகிவிட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில் வைத்து, மூவரையும் வெட்டியிருப்பது, சட்டம் – ஒழுங்கைக் கேள்விக்கு உரியதாக்கி இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவையில், பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கெடுத்துவிட்டு வெளியில் வந்த குற்றவாளிகள் மூன்று பேரை, இரு சக்கர வாகனங்களில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்திலிருந்தே பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில் வைத்து, மூவரையும் வெட்டியிருப்பது, சட்டம் ஒழுங்கைக் கேள்விக்கு உரியதாக்கியிருக்கிறது.
பட்டப் பகலில், நீதிமன்ற வளாகத்திலிருந்தே பயங்கரமான ஆயுதங்களுடன் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வரும் அதே கோவையில் இன்று, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் என காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ள தமிழ்நாடு காவல் ஆணையத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
காவல் துறையின் கைகளைக் கட்டிப் போட்டு, திமுகவினருக்குச் சாதகமான செயல்களைச் செய்யவும், ஆளுங்கட்சியினரின் அரசியல் செயல்பாடுகளுக்கும், எதிர்க்கட்சியினரை மிரட்டப் பயன்படுத்துவதுமான திமுக அரசின் கையாலாகாத செயல்பாடுகளால், தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது திமுக. வரும்முன் காப்பது என்பது தமிழக அரசைப் பொறுத்தவரை அறிந்திராத செயல்பாடாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. இனியாவது காவல்துறையை ஆளுங்கட்சியினர் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு முயற்சிக்குமா?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கோவையில், பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கெடுத்துவிட்டு வெளியில் வந்த குற்றவாளிகள் மூன்று பேரை, இரு சக்கர வாகனங்களில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
நீதிமன்ற… pic.twitter.com/cVA9CxywSJ
— K.Annamalai (@annamalai_k) September 12, 2023