![கூட்டுறவு பால் சங்கத்தில் உள்ளூர் விற்பனைக்கு டோக்கன் நிறுத்தம்; அரசின் ஊக்கத்தொகை பெற மறைமுகமாக விற்பனை முடக்கம் கூட்டுறவு பால் சங்கத்தில் உள்ளூர் விற்பனைக்கு டோக்கன் நிறுத்தம்; அரசின் ஊக்கத்தொகை பெற மறைமுகமாக விற்பனை முடக்கம்](https://img.dinamalar.com/images/dummy-noimg.jpg)
![கூட்டுறவு பால் சங்கத்தில் உள்ளூர் விற்பனைக்கு டோக்கன் நிறுத்தம்; அரசின் ஊக்கத்தொகை பெற மறைமுகமாக விற்பனை முடக்கம் கூட்டுறவு பால் சங்கத்தில் உள்ளூர் விற்பனைக்கு டோக்கன் நிறுத்தம்; அரசின் ஊக்கத்தொகை பெற மறைமுகமாக விற்பனை முடக்கம்](https://img.dinamalar.com/images/dummy-noimg.jpg)
தேனி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் பால்மாடு வளர்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டுகளில்ஆவின் தினமும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்தனர். தனியார் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவின் பால் கொள்முதலுக்கு திண்டாடும் நிலை உருவாகியது.
பின்னர் ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் ஊக்க தொகையாக ரூ. 3 வழங்க அரசு உத்தரவிட்டது. மாவட்டத்தில் பெரியகுளம், போடி, பூதிப்புரம், வாலையாத்துப்பட்டி, வள்ளல்நதி போன்ற பால் கூட்டுறவு சங்கங்கள் ஆவினுக்கு தினமும் தலா 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் லிட்டர் வரை பால் வழங்கும் முக்கிய சங்கங்களாக செயல்பட்டன. இச் சங்கங்களிலும் உற்பத்தி 50 சதவீதம் குறைந்து விட்டது.
பெரியகுளம் பால் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யும் பாலில் 30 முதல் 40 சதவீதம் உள்ளூரில் லிட்டர் ரூ.39க்கு விற்பனை செய்கின்றனர். தனியார் லிட்டர் ரூ.47 வரை விற்கின்றனர்.
இதனால் மக்கள் கூட்டுறவு சங்க பாலை விரும்பி வாங்குகின்றனர். சில்லரை விற்பனைக்கு முன் கூட்டியே பணம் செலுத்தி டோக்கன் பெற்று பால் பெறுகின்றனர்.
வாடிக்கையாளர் வசதிக்காக நடக்கு அக்ரஹாரத்தில் பால் டோக்கன் மையம் செயல்பட்டது. கடந்த ஒரு மாதமாக சில்லரை விற்பனை பால் டோக்கன் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்கையில், சங்கத்தில் உற்பத்தியாகும் 1200 லிட்டர் பாலை அப்படியே ஆவினுக்கு அனுப்பினால் லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்க தொகை கிடைக்கும்.
சில்லரை விற்பனை பாலுக்கு ஊக்க தொகை கிடைக்காது என கருதி சில்லரை விற்பனையை குறைக்கும் நோக்கில் டோக்கன் வினியோகத்தை நிறுத்தி உள்ளனர். இதே நிலைதான் மற்ற சங்கங்களிலும் நிலவுகிறது.
ஆனால் கூட்டுறவு பால் சங்கங்களின் உள்ளூர் விற்பனையில் (விளிம்பு தொகை) லாபத்தில் ஊக்க தொகையை உற்பத்தியாளருக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை பால் சங்கங்கள் பின்பற்றாமல் ஆவினுக்கு அனைத்து பாலையும் அனுப்பி உள்ளூர் விற்பனைக்கு மூடுவிழா நடத்த திட்டமிட்டு விற்பனையை குறைத்து வருகின்றனர்.
டோக்கன் கேட்கும் நுகர்வோருக்கு புதிய விலை பட்டியல் வரவில்லை ஒரு மாதத்திற்கு பின் டோக்கன் வழங்கப்படும் எனகூறி சமாளிக்கின்றனர்.