![கிராண்ட் ஸ்லாம் பட்டம், நம்பர் ஒன் இடமே லட்சியம் – சொல்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா | கிராண்ட்ஸ்லாம் பட்டம் நம்பர் ஒன் பதவியே லட்சியம் என்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா கிராண்ட் ஸ்லாம் பட்டம், நம்பர் ஒன் இடமே லட்சியம் – சொல்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா | கிராண்ட்ஸ்லாம் பட்டம் நம்பர் ஒன் பதவியே லட்சியம் என்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/06/xlarge/1194812.jpg)
![கிராண்ட் ஸ்லாம் பட்டம், நம்பர் ஒன் இடமே லட்சியம் – சொல்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா | கிராண்ட்ஸ்லாம் பட்டம் நம்பர் ஒன் பதவியே லட்சியம் என்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா கிராண்ட் ஸ்லாம் பட்டம், நம்பர் ஒன் இடமே லட்சியம் – சொல்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா | கிராண்ட்ஸ்லாம் பட்டம் நம்பர் ஒன் பதவியே லட்சியம் என்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/06/xlarge/1194812.jpg)
சமீபத்தில் முடிவடைந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழகம் பதக்கப் பட்டியலில் கடைசி நாளில் அதுவும் இறுதிக்கட்ட 2வது இடத்தை பிடித்து தொடரை நிறைவு செய்ததில் டென்னிஸ் விளையாட்டு முக்கிய பங்கு வகித்தது. கடைசி நாளில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இறுதிப் போட்டியில் தமிழகம் 2 தங்கப் பதக்கம் வென்றது. இதன் காரணமாகவே பதக்கப் பட்டியலில் தமிழகத்தால் 2-வது இடத்துடன் நிறைவு செய்ய முடிந்தது.
இதில், ஒரு தங்கப் பதக்கம் கோயம்பத்தூரைச் சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவதி வென்றதாகும். இறுதிப் போட்டியில் அவர், தெலங்கானாவைச் சேர்ந்த லட்சு ஸ்ரீ தந்துவை 6-1, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். ஜூனியர் டென்னிஸ் வட்டாரத்தில் மாயா பிரபலமானவர். ஜூனியர் பிரிவில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையாக திகழும் மாயா.தமிழ்நாட்டிலிருந்து மிளிரும் நம்பிக்கைக்குரிய வளரும் டென்னிஸ் வீராங்கனைகளில் முக்கியமானவராக திகழ்கிறார்.
தேசிய அளவிலான போட்டிகளில் யு-12, யு-14, யு-16 சாம்பியன் பட்டம் வென்றுள்ள மாயா, கடந்த ஆண்டுஒற்றையர் பிரிவில் 5 ஐடிஎஃப் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 3 பட்டங்களையும் வென்று அனைவரும் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது யு-16, யு-18 பிரிவில் இந்திய அளவில் நம்பர் ஒன் வீராங்கனையாக வலம் வருகிறார் மாயா.
14 வயதிலேயே டென்னிஸ் மீது தீராத பேரார்வம் மற்றும் ஆர்வத்துடன் துறுதுறுவென களத்தில் சுழன்றாடிய மாயா கூறும்போது, “8 வயதில் விளையாட ஆரம்பித்தேன். 6 வருடங்களாக தொடர்ந்து விளையாடி வருகிறேன். தற்போது எனக்கு 14 வயதாகிறது. சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎப்) ஜூனியர் தரவரிசையில் 145-வது இடத்தில் உள்ளேன். அதேவேளையில் அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறேன். டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருவதால் வழக்கமான பள்ளி படிப்பு போன்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) அமைப்பில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன்.
ஏதோ ஒரு விளையாட்டில் இருக்க வேண்டும் என்ற நினைப்பில்தான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தேன். அதன் பின் அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதால் தொழில்முறை போட்டியாகவே மாற்றிக் கொண்டேன். எனது ரோல் மாடலும் எனக்கு மிகவும் பிடித்தவரும் அமெரிக்க முன்னாள் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்தான்.
எந்த வீராங்கனை போன்றும் வரவேண்டும் என்ற எண்ணங்கள் இல்லை. ஆனால் உலகின் நம்பர் ஒரு வீராங்கனையாகவும், இந்தியாவுக்காக முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று கொடுக்க வேண்டும் என லட்சியமும் உள்ளது. இந்தியாவில் இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் சரி, மகளிர் ஒற்றையர் பிரிவிலும் சரி யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றது இல்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
எனது பலமே ஆக்ரோஷமாக விளையாடுவது தான். முன்னங்கை, பின்னங்கை என்றில்லாமல் அனைத்து கிரவுண்ட் ஸ்டிரோக்கிலும் திடமாகவே செயல்படுவேன். வலுவான சர்வீஸ்கள் செய்வதை பலமாக கருதுகிறேன். கேலோ இந்தியா போட்டிகள் முடிவடைந்த நிலையில் அடுத்து எகிப்து நாட்டில் நடைபெற உள்ள ஐடிஎஃப் தொடரில் விளையாட உள்ளேன்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஆசிய பசிபிக் வயது 14 பிரிவில் பங்கேற்றேன். இந்த தொடரில் 5-வது இடத்தையே பிடித்த போதிலும் சிறந்த அனுபவமாக இருந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கும் நமது வீராங்கனைகளின் ஆட்டத் திறனுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. அவர்கள், களத்தில் அதிக வலுவாக செயல்படுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உடற்தகுதியிலும் சிறந்து விளங்குகின்றனர். 3 செட்விளையாடினாலும் அவர்கள் சோர்வடைவது இல்லை. தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த விஷயங்களில் நாம் முன்னேற்றம் காணவேண்டும். இந்த தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக தகுதி சுற்றை என்னால் கடக்க முடியாமல் போனது.
பிரெஞ்சு ஓபனில் ஜூனியர் பிரிவில் விளையாட வாய்ப்பு உள்ளது. இதில் பங்கேற்க வேண்டுமானால் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்கு வரவேண்டும். தற்போது அந்த இலக்கை நோக்கியே பயணித்து வருகிறேன்” என்றார்.
மாயாவின் ரேவதி கூறும்போது, “தற்போது மாயாவுக்கு சில நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன. மாயாவின் திறமையை பாராட்டி கிராண்ட் ஸ்லாம் பெடரேஷன் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த நிதி உதவி உலக அளவில் 2 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் மாயாவும் ஒருவர் என்று நினைத்தால் பெருமையாக இருக்கிறது. மாயா ஒரே ஆண்டில் 8 ஐடிஎப் பட்டங்களை வென்றதுதான் இதற்கு காரணம்” என்றார்.