![களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டம் | Only clay Ganesha idols allowed to dissolve in water bodies – Pollution Control Board plans களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டம் | Only clay Ganesha idols allowed to dissolve in water bodies – Pollution Control Board plans](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/16/xlarge/1124307.jpg)
![களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டம் | Only clay Ganesha idols allowed to dissolve in water bodies – Pollution Control Board plans களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டம் | Only clay Ganesha idols allowed to dissolve in water bodies – Pollution Control Board plans](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/16/xlarge/1124307.jpg)
சென்னை: தமிழகத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக்மற்றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சுமற்றும் மக்காத ரசாயன சாயம் அல்லது எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின்மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தைஅடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கைசாயங்களால் செய்யப்பட்ட அலங்காரஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.