![ஆய்வுக்குப் பிறகு அவசியம் கருதி புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் | new family card will issued if necessary post inspection Minister Periyakaruppan ஆய்வுக்குப் பிறகு அவசியம் கருதி புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் | new family card will issued if necessary post inspection Minister Periyakaruppan](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/08/xlarge/1195943.jpg)
![ஆய்வுக்குப் பிறகு அவசியம் கருதி புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் | new family card will issued if necessary post inspection Minister Periyakaruppan ஆய்வுக்குப் பிறகு அவசியம் கருதி புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் | new family card will issued if necessary post inspection Minister Periyakaruppan](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/08/xlarge/1195943.jpg)
சென்னை: கூட்டுறவுத் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் பேசியதாவது:
தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் கடந்த ஜன.31-ம் தேதி வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் ரூ.1,764.42 கோடி (15 சதவீதம்) கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 56,659 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழு கடனாக ரூ.3,581.45 கோடி, 13,137 பேருக்கு டாப்செட்கோ கடனாக ரூ.101.26 கோடி, 7,561 பேருக்குடாம்கோ கடனாக ரூ.63.89 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 4,033 பேருக்கு தாட்கோகடனாக ரூ.34.39 கோடி, 9,641 பேருக்கு மாற்றுத் திறனாளி கடனாகரூ.46.13 கோடி, 73,599 பேருக்கு சிறுவணிகக் கடனாக ரூ.277.21 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் வருமாறு: பாரத் அரிசி, பாரத் ஆட்டா, குறைந்த விலை மளிகைப் பொருட்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதுபோல், தமிழக அரசுக்கும் திட்டம் உள்ளதா?
சில நேரங்களில் மத்திய அரசும் அத்தியாவசியப் பொருட்களை தருவார்கள். அது உணவுத் துறையின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத் துறைக்கு வழங்கப்படும். இதுபோன்ற முடிவுகள் உணவுத் துறையின் மூலமாக எடுக்கப்படும்.
குடும்ப அட்டைகளை உணவுத்துறை வழங்குகிறது. கடைகளை கூட்டுறவுத் துறை நடத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக குடும்ப அட்டை வழங்கப்படவில்லையே..
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தார்கள். ஆகவே, குறிப்பிட்ட காலத்துக்கு குடும்ப அட்டை விநியோகத்தை நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது. எனவே, சில ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு அதன் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று அவர் பதிலளித்தார்.