![ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட் | Case against online gambling ban: Orders reserved ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட் | Case against online gambling ban: Orders reserved](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/13/xlarge/1122747.jpg)
![ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட் | Case against online gambling ban: Orders reserved ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட் | Case against online gambling ban: Orders reserved](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/13/xlarge/1122747.jpg)
சென்னை: தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது. பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், வாதங்கள் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.