
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. இதில் சென்னை நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட எட்டு இடங்கள் அடக்கம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் ஒருவரின் இல்லத்திலும் இந்த சோதனை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடக்கிறது. கோவை, கரூர், நாமக்கல். திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று முறை சோதனை நடந்த நிலையில் மீண்டும் சோதனை நடந்து வருகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுமீது பதில் அளிக்க உத்தரவு: முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை செப்.15-க்குள் பதிலளிக்க சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரினார். அதையேற்ற நீதிபதி அல்லி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறையினர் செப்.15-க்குள் பதில்அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.