![அந்த நாலு நிமிடங்களை விட்டு விலகினால் சுகமாகும் நமது நேரங்கள்! அந்த நாலு நிமிடங்களை விட்டு விலகினால் சுகமாகும் நமது நேரங்கள்!](https://media.assettype.com/kalkionline%2F2024-02%2F6beec76a-2fc8-40a1-a1ad-8f45965ba795%2F1.jpg?w=1200&ar=40%3A21&auto=format%2Ccompress&ogImage=true&mode=crop&enlarge=true&overlay=false&overlay_position=bottom&overlay_width=100)
![அந்த நாலு நிமிடங்களை விட்டு விலகினால் சுகமாகும் நமது நேரங்கள்! அந்த நாலு நிமிடங்களை விட்டு விலகினால் சுகமாகும் நமது நேரங்கள்!](https://media.assettype.com/kalkionline%2F2024-02%2F6beec76a-2fc8-40a1-a1ad-8f45965ba795%2F1.jpg?w=1200&ar=40%3A21&auto=format%2Ccompress&ogImage=true&mode=crop&enlarge=true&overlay=false&overlay_position=bottom&overlay_width=100)
![அந்த நான்கு நிமிடங்களை விட்டுவிடுவது நமது குணமாகும் நேரம்](https://media.assettype.com/kalkionline%2F2024-02%2F6beec76a-2fc8-40a1-a1ad-8f45965ba795%2F1.jpg)
அந்த நான்கு நிமிடங்களை விட்டுவிடுவது நமது குணமாகும் நேரம் VectorStock.com/24899925
கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் அந்தப் பெண் படிப்பில் மட்டுமில்லாமல். விளையாட்டிலும் கெட்டிக்காரி. வாலிபால் ஆட்டத்தில் சிறந்தவர். பள்ளிப்பருவத்தில் இருந்தே வாலிபால் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். இப்போது கல்லூரி வந்ததும் வெளியூர் போட்டிகளில் பங்கேற்க அவள் தாய் எதிர்ப்பு தெரிவித்தாள். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான், “இனி நீ சின்னப்பிள்ளை இல்லை. தனியா வெளியூர் போய் குட்டைப் பாவாடையோட போட்டிக்கு போறேன்னு நீ பாட்டுக்கு கிளம்பிடுவ, ஆனா, இங்க கேள்வி கேட்கற நாலு பேருக்கு நான் என்ன பதில் சொல்ற?” என்றாள்.
அதற்கு அந்தப் பெண் திருப்பிக் கேட்டாள், “அந்த நாலு பேரு நாலு நிமிஷம் என்னைப் பத்திக் கேட்கறதுக்காக என் திறமையை விடறது மட்டும் சரியாம்மா?” சரியான கேள்வி.
நம்மில் பெரும்பாலோர், 'நாலு பேரு நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்களோ?' என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? கேள்வி கேட்கும் அந்த நாலு பேருக்காக வாழ ஆரம்பிக்கும்போது நாம் நமது தனித்துவத்தை இழந்து அடிமையாக நேரிடும் அபாயமுண்டு என்பதுதான் நிஜம்.
ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையிலே அந்த நான்கு பேர் நிமிஷத்தைத் தாண்டி நம்மைப் பற்றி நினைக்க முடியாது. காரணம், அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள். ஆம், இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவே நேரம் போதவில்லை எனும்போது அடுத்தவர் பிரச்னையை எவ்வளவு நேரம் அவர்களால் சுமக்க முடியும்?
வெறும் நான்கு நிமிட பேச்சுக்காக அல்லது விமர்சனத்துக்காக நமது தனித்தன்மையை இழப்பது புத்திசாலித்தனமா? அந்த நான்கு பேரின் நான்கு நிமிடப் பேச்சுக்காக நமது விருப்பம், கனவுகளுக்கு தடை போட்டு மனந்தளர வேண்டுமா?
நமக்கும், நமது நலம் விரும்பிகளின் அறிவுக்கும் இது நன்கு புரியும் என்றாலும் மனசு கேட்காது. யாரோ ஒருவர் எங்கோ இருந்து பேசும் பேச்சை எண்ணி மனம் எதையெதையோ கற்பனை செய்து நம்மை வீழ்த்தும். இங்குதான் நமது அறிவு மனதை முந்திக்கொண்டு செயல்பட பயிற்சி தர வேண்டும்.
அடுத்தவர் என்ன சொல்வாரோ எனும் எண்ணம் மனதில் எழும் அடுத்த நிமிடமே நமது அறிவை விழிக்கச் செய்து அதை விட்டு விலகி நமது செயலில் கவனத்தைச் செலுத்தி முன்னேறப் பழக வேண்டும்.
புறம் பேசுபவர்களை புறக்கணித்தால் மட்டுமே நம்மால் தடையற்ற வெற்றி காண முடியும்.