![அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க இலங்கை அரசு அனுமதி – சர்ச்சை ஏன்? அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க இலங்கை அரசு அனுமதி – சர்ச்சை ஏன்?](https://ichef.bbci.co.uk/news/1024/branded_tamil/3cda/live/d8c01b40-0eb6-11ef-b9d8-4f52aebe147d.png)
![அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க இலங்கை அரசு அனுமதி – சர்ச்சை ஏன்? அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க இலங்கை அரசு அனுமதி – சர்ச்சை ஏன்?](https://ichef.bbci.co.uk/news/1024/branded_tamil/3cda/live/d8c01b40-0eb6-11ef-b9d8-4f52aebe147d.png)
பட மூலாதாரம், கெட்டி படங்கள்
இந்தியாவின் ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் 20 வருடங்களுக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தியின் ஊடாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட விலைமனுக் கோரலுக்கு கடந்த 7-ஆம் தேதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
2030-ஆம் ஆண்டளவில், இலங்கையின் மொத்த மின் உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதே இலங்கையின் இலக்காகும்.
டெண்டரில் உள்ள விவரங்கள் என்ன?
‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட விலை மனுக்கோரலுக்கு (டெண்டர்) அமைய, எதிர்வரும் 20 வருடங்களுக்கு அந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தில், ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு (கிலோவாட் ஹவர்) 8.26 அமெரிக்க டாலர் (அந்நிய செலாவணிக்கு அமையவாக இலங்கை ரூபாவில் செலுத்தும் நிபந்தனையின் பிரகாரம்) என்ற இறுதிக் கட்டணத்தில் ஏற்றுக்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 484 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதானி திட்டம் இலங்கையில் சர்ச்சை ஆவது ஏன்?
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு இலங்கையில் சூழலியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் பின்னணியிலேயே, இந்த அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு வருகைதரும் வலசைப் பறவைகளுக்கு இதனூடாக பாதிப்பு ஏற்படும் என சூழலியலாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதுடன், ஆண்டொன்றிற்கு 1.5 கோடி பறவைகள் வருவதாக சூழலியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்குள் வலசைப் பறவைகள் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலாக மன்னார் காணப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல், வடமாகாணத்திற்கு உரித்தான மன்னார் தீவானது, புவிசார் அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்கப் பகுதியாகும். இது மீனவ சமூகம் வாழும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு காரணமாக இலங்கையின் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதனால், மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது, பறவைகளுக்கு மாத்திரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டம் கிடையாது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, வலசைப் பறவைகள் இலங்கைக்குள் வருகைதராத காலப் பகுதியில் சுற்றுசூழல் அறிக்கை தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்க இலங்கை அரச நிறுவனங்கள் செயற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
ரமணி எல்லேபொல தலைமையிலான விசேட குழுவினாலேயே இந்த திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்புக்கள் தொடர்பான கணிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான அறிக்கையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தேவக்க வீரகோன், மூலிகைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கையை கலாநிதி ஹிமேஷ் ஜயசிங்க, நீர் நிலைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கையை டி.ஏ.ஜே.ரன்வல ஆகிய புத்திஜீவிகள் தயாரித்திருந்தனர்.
இந்த அறிக்கைகளை தயாரிப்பதற்காக 14 வல்லுநர்கள் அடங்கிய குழாம் செயற்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
மக்களிடமிருந்து பெற்று கருத்துக்களுக்கு என்ன ஆனது?
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினால் இலங்கையில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையில் தீர்மானம் எட்டியிருந்தது.
இது தொடர்பான எழுத்துமூல கருத்துக்களை முன்வைக்க மார்ச் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விஷயம் தொடர்பில் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பிபிசி, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் சுற்றுச்சூழல் முகாமைத்துவ மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் துணசி இயக்குநர் நாயகம் என்.எஸ்.கமகேவிடம் வினவியது.
”இந்தத் திட்டத்தின் ஆதரவாளராகச் செயற்படும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (Sri Lanka Sustainable Energy Authority), தொடர்புடைய சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை தயாரித்து எங்களிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையைப் படித்து, அதன் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை மீண்டும் மேம்படுத்திய பிறகு, பொதுமக்களின் கருத்துக்களைப் பெற நாங்கள் தீர்மானித்தோம்,” என்றார்.
“அதன் பிரகாரம், எமக்குக் கிடைத்த பொதுமக்கள் கருத்துக்களையும், அவை தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களையும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இதுவரை அந்த விளக்கங்கள் எமக்கு கிடைக்கவில்லை. அந்த விளக்கங்களைப் பெற்ற பிறகு, தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள விதிகளின்படி இந்த அறிக்கையை கையாள்வோம் என்று நம்புகிறோம்,” என என்.எஸ்.கமகே தெரிவித்தார்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும்?
மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் நிறுவப்படவுள்ள காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அதானி கிரீன் எனர்ஜி சமர்ப்பித்த விலை மனுக்கோரலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்துக்கொள்வதற்காக பிபிசி சிங்கள சேவை இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோனிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த மின்சார சபைத் தலைவர், இது தொடர்பான உரிய ஆவணங்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்.
மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷா ஜயவர்தனவை தொடர்பு கொள்ள பிபிசி சிங்கள சேவை முயற்சித்த போதிலும் செயலாளரிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
பட மூலாதாரம், கெட்டி படங்கள்
இலங்கையில் பேசுபொருளான அதானி
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தின் கூட்டு அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் அதானி குழுமத்துடன் 2021-ஆம் ஆண்டு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பின்னர் இலங்கை மக்கள் மத்தியில் கௌதம் அதானியின் பெயர் அதிகமாக பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மன்னாரில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை மக்கள் எதிர்ப்புக்களை ஆரம்பித்திருந்தனர்.
அதானி நிறுவனத்தின் உரிமையாளரான கௌதம் அதானி 1961-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி இந்தியாவின் அகமதாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை சாந்திலால் அதானி, தொழிலதிபராவார்.
புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்வது மட்டுமே தனக்கு பலன் அளிக்காது என்பதை உணர்ந்த கௌதம் அதானி, வணிகவியல் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார்.
தமது குடும்ப வர்த்தகமான ஆடை வர்த்தகத்தை தனது தொழிலாக ஏற்றுக்கொள்ளாது, வைரம் தொடர்பான வர்த்தகத்தை தேர்வு செய்ததை அவர் தனது இரண்டாவது செயற்பாடாக முன்னெடுத்தார்.
இதையடுத்து, தனது 20-வது வயதில், கௌதம் அதானி, வீட்டை விட்டு வெளியேறி மும்பை நோக்கிப் புறப்பட்டார். அங்கு வைர வர்த்தகத்திற்கு பெயர் பெற்ற சவேரி மார்க்கெட்டில் பணிப் புரிந்தார்.
இரண்டு – மூன்று ஆண்டுகளில், அவர் வைரங்களை வரிசைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அதன்பின்னர் தனது சொந்த வைரத் தரகுத் தொழிலை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் சுமார் மூன்றாண்டுகளுக்குள் கௌதம் அதானி வைர வர்த்தகத்தில் கோடீஸ்வரர்கள் வரிசையில் இணைந்துக்கொண்டார். 30 வயதிற்குள் கௌதம் அதானி கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்வாங்கப்பட்டார்.
1991-ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்குள் கௌத்தம் அதானியின் முழு சொத்து மதிப்பு 78.4 பில்லியன் அமெரிக்க டாலர் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான கௌதம் அதானியின் நெருங்கிய உறவு, தேசிய அளவிலான பல முக்கியமான திட்டங்களில் அவர் பங்கேற்பதற்கு வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மேலும், அவரது எரிசக்தி மற்றும் சுரங்க நிறுவனங்கள் வணிகத்திற்காக அரசாங்க உறவுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சுற்றுச்சூழல் விரோதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.