திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசியபோது மத்திய அமைச்சர் குறுக்கிட்டதால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத் தொகை விடுவிப்பது தொடர்பாக நீலகிரி எம்பி ஆ.சாரா இன்று கேள்வி எழுப்பி பேசினார்.
“தேசிய பேரிடர் நிதியை பிற மாநிலங்களுக்கு ஒதுக்குவது போல், தமிழகத்துக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும்” என்று ஆ.ராசா கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, மதிமுக எம்பி கணேசமூர்த்தி, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் ஒதுக்க கோரி மக்களவையில் பேசினார்.
இதையடுத்து, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசிக் கொண்டிருக்கும்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறுக்கீடு செய்தார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, நீங்கள் எம்பியாக இருக்கவும், மத்திய அமைச்சராக இருக்கவும் தகுதி இல்லாதவர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பட்டியலின அமைச்சரை டி.ஆர்.பாலு அவமதித்ததாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை சிறிது நேரம் முடங்கியது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…