![பேரவைக்குள் குட்கா | திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதி: அரசு வாதம் | Case against DMK MLAs: TN Govt Argument](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/07/02/xlarge/1273360.jpg)
![](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/07/02/xlarge/1273360.jpg)
சென்னை: சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது, என்று அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்துச் சென்றதாக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு அப்போதைய சட்டப்பேரவை உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து உரிமைக்குழு, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க் களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்தது. இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை செயலர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இதுதொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ், முந்தைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் அந்த நோட்டீஸ் காலாவதியாகி விட்டது என்றார்.
அப்போது முந்தைய உரிமை மீறல் குழுவின் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில், இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.