அகமதாபாத்: 13-வது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூஸிலாந்துடன் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.
கேன் வில்லியம்சன் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் டாம் லேதம் அணியை வழிநடத்தினார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 86 பந்துகளை சந்தித்து ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ரிவர்ஸ் ஸ்வீப்ஷாட் விளையாட முயன்று கிளென்பிலிப்ஸ் பந்தில் போல்டானார். கேப்டன் ஜாஸ் பட்லர் 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்த நிலையில் மேட் ஹென்றி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.