மும்பை: “இந்தி திரையுலகில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் ரூ.500 கோடி முதல் ரூ.800 கோடி வரை வசூலிக்கவே பார்க்கிறார்களே தவிர, நல்ல திரைப்படங்களை எடுக்க நினைக்கவில்லை” என பாலிவுட்டை இயக்குநர் அனுராக் காஷ்யப் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “வெற்றி அதிகமான அழிவைத் தருவதை அடிக்கடி உணர்கிறேன். ‘சாய்ராட்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்த போது, அதன் இயக்குநரும் என் நண்பருமான நாகராஜ் மஞ்சுலேவிடம், ‘மராத்தி சினிமா இத்துடன் முடிந்துவிட்டது என்றேன். ஏனென்றால் இப்போது யாரும் சினிமாவில் கதைகளைச் சொல்ல விரும்புவதில்லை. மாறாக ரூ.100 கோடி வசூலை ஈட்டவே விரும்புகிறார்கள்.
நமது இந்தி திரையுலகில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் ரூ.500 கோடி முதல் ரூ.800 கோடி வரை வசூலிக்கவே பார்க்கிறார்களே தவிர, நல்ல திரைப்படங்களை எடுக்க நினைக்கவில்லை. அதற்கு முதலில் உங்கள் படங்களை ஊமையாக்க வேண்டும். பின்னர் கதைகளை தியாகம் செய்ய வேண்டும். அது ஒருபோதும் அசலாக இருக்கப்போவதில்லை. ஒருவரின் ஃபார்முலாவை பின்பற்றி மற்றவர்களும் அதையே காப்பி செய்துகொண்டிருக்கிறார்கள்.
இப்போது எல்லோரும் பான் இந்தியா ட்ரெண்டை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் 10 பான் இந்தியப் படங்களைப் பார்த்தால், அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருப்பது ஆரோக்கியமான திரையுலகத்துக்கு நல்லதல்ல. ஒன்று அல்லது இரண்டு படங்கள் வரவேற்பை பெறலாம். அதைத் தொடர்ந்து எல்லோரும் ஒரேமாதிரியான படங்களை காப்பி அடித்து, பின் ஒரேமாதிரியான ஃப்ளாப்பை கொடுப்பார்கள்” என்றார்.