பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கல பதக்கம் வென்றார். இது இந்தியாவின் 5-ஆவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக்ஸில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (எஸ்ஹெச்1) இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பங்கேற்றார். முதல் சீரியலில் 50.0 புள்ளிகளைப் பெற்ற இரண்டாம் இடம் பிடித்தார். 2-வது சீரிஸில் 97.6 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்தார். தொடர்ந்து முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்த அவர், இறுதியில் 211.1 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். இதில் ஈரான் வீராங்கனை சரே ஜவன்மார்டி 236.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். துருக்கி வீராங்கனை ஐசென் ஓஸ்கல் 231.1 புள்ளிகளைப் பெற்று வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனை ரூபினா வெண்கலம் வென்றுள்ள நிலையில் இந்தியாவுக்கு இதுவரை மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் பதக்க விவரம்: வெள்ளிக்கிழமை நடைபெற்ற (ஆக.30) பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் அவனி லேகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் இந்தியாவின் மணிஷ் நார்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா வெண்கலம் வென்றுள்ளார். ஆக 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.