![திட்ட அறிக்கைப்படி சாலை அமைக்காவிட்டால் நிலம் திரும்ப வழங்கப்படுமா? – ஐகோர்ட் கேள்வி | Will the land returned if the road is not constructed as per the project report? – HC](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/07/04/xlarge/1274412.jpg)
![](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/07/04/xlarge/1274412.jpg)
மதுரை: திட்ட அறிக்கை அடிப்படையில் நான்கு வழிச்சாலை பணி அமைக்கப்படாவிட்டால் கையகப்படுத்தப்பட்ட நிலம் திரும்ப வழங்கப்படுமா என நெடுஞ்சாலைத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த பிரபு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டில் திருச்செந்தூர்- பாளையங்கோட்டை – அம்பாசமுத்திரம் – தென்காசி – குற்றாலம் – செங்கோட்டை சாலையும் மேம்படுத்தப்படுகிறது. இப்பணிக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் திட்ட அறிக்கை அடிப்படையில் சாலை அமைக்கப்படவில்லை.
குறிப்பாக, தூதுக்குழி கிராமத்தில் சாலை வளைவாக உள்ளது. இங்கு அடிக்கடி விபத்து நடைபெற்றது. இதனால் திட்ட அறிக்கை அடிப்படையில் சாலை நேராக அமைத்திருக்க வேண்டும். ஆனால், பழையபடியே வளைவாகவே அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. எனவே, பாளையங்கோட்டை- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தூதுக்குழி கிராமத்தில் திட்ட அறிக்கை அடிப்படையில் நான்கு வழிச்சாலை அமைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சாலை அமைக்கவே நிலம் கையகப்படுத்தப்பட்டது. திட்ட அறிக்கை அடிப்படையில் சாலை அமைக்கப்படாவிட்டால் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை” என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “திட்ட அறிக்கையின் அடிப்படையில் சாலை அமைக்கப்படுமா அல்லது மாற்றி அமைக்கப்படுமா? மாற்றி அமைக்கப்பட்டால் முதல் திட்ட அறிக்கையின் அடிப்படையில் கையக்கப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை என்ன? அது கைவிடப்படுமா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.