சண்டிகர் தேர்தலின் முழுப் பதிவையும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் தலைமை அதிகாரியின் நடத்தை குறித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. அங்கே நடந்தது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: Chandigarh mayor polls: Supreme Court raps presiding officer, says won’t allow ‘democracy to be murdered’
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பான முழு பதிவும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலின் காவலில் வைக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய இந்த அமர்வு, பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறவிருக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலின் கூட்டத்தை அடுத்த உத்தரவு வரும் வரை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமாரின் மனுவை விசாரிக்கும்போது தலைமை நீதிபதி சந்திரசூட் “இது தேர்தல் அதிகாரியின் நடத்தையா? (அவர்) கேமராவைப் பார்த்து, வாக்குச்சீட்டில், கீழே ஒரு கோடு போட்டு அதை தட்டில் வைக்கிறார். மேலே, ஒரு கோடு போடும்போது, அந்த நபர் வாக்குச் சீட்டுகளை சிதைத்து, தன்னை யார் பார்க்கிறார்கள் என்று கேமராவைப் பார்க்கிறார்” என்று குறிப்பிட்டார்.
“உங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உச்ச நீதிமன்றம் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லுங்கள். ஜனநாயகத்தை இப்படி கொலை செய்ய அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில் உள்ள பெரும் சக்தி, தேர்தல் நடைமுறையின் தூய்மைதான், ஆனால், இங்கு என்ன நடந்துள்ளது” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் வியப்பை வெளிப்படுத்தினார்.
தேர்தலின் தூய்மை குறித்து தலைமை நீதிபதி கூறியதில் எந்த சர்ச்சையும் இருக்க முடியாது என்று கூறிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முழு விவரத்தையும் பெறாமல் கருத்தை உருவாக்க வேண்டாம் என்று நீதிதிகள் அமர்வை வலியுறுத்தினார். ‘நீதிபதிகள் இந்த படத்தின் ஒரு பக்கத்தையே பார்த்திருக்கிறார்கள்.” என்று கூறினார்.
அடுத்த முறை முழு வீடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதற்கு துஷார் மேத்தா அப்படியே செய்ய ஒப்புக்கொண்டார்.
துஷார் மேத்தா விதிமுறைகளைப் பற்றி குறிப்பிடுகையில், தலைமை நீதிபதி மேலும் கூறினார், “நாங்கள் விதிமுறைகளின்படி செல்லப் போவதில்லை. நம் மனசாட்சி திருப்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இல்லையெனில், புதிதாக தேர்தலை நடத்துங்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி யார் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம். புதிதாக தேர்தலை நடத்துங்கள்.” என்று கூறினார்.
துஷார் மேத்தா மீண்டும் நீதிபதிகள் அமர்வை வலியுறுத்தினார், “மிகவும் தேர்ந்தெடுத்துச் சொல்லப்பட்ட ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு கருத்தை உருவாக்க வேண்டாம்” என்று கூறினார்.
ஆனால், அது விஷயங்களைத் தீர்க்கவில்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார், “அவர் ஏன் குற்றம் செய்துவிட்டு தப்பியவரைப் போல கேமராவைப் பார்க்கிறார்? அவர் தன் கடமையைச் செய்ய வேண்டும். அவர் கேமராவைப் பார்க்கிறார், பின்னர், அவர் வாக்குச்சீட்டை சிதைக்கிறார்.” என்று தலைமை நீதிபதி கூறினார்.
குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, இந்த பதிவை ஆய்வு செய்த பிறகு புதிய தேர்தலை நடத்துவதன் மூலம் தீர்வு காண முடியும் என்று கூறினார். இதற்கு நீதிபதிகள் அமர்வு ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்ட நீதிபதிகள் அமர்வு, “இந்த கட்டத்தில், தேர்தல் நடைமுறையின் தூய்மை மற்றும் புனிதத்தைப் பாதுகாக்க, உயர் நீதிமன்றம் நிறைவேற்றத் தவறிய, தகுந்த இடைக்கால உத்தரவு தேவை என்று நாங்கள் கருதுகிறோம். . சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயர் தேர்தல் தொடர்பான முழு பதிவும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். இதில் வாக்குச் சீட்டுகள், முழுத் தேர்தல் செயல்முறையின் வீடியோ படம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரின் பாதுகாப்பில் உள்ள அனைத்துப் பொருட்களும் அடங்கும்.” என்று உத்தரவிட்டனர்.
“இந்தப் நடவடிக்கை இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் பதிவேடுகளை அப்படியே ஒப்படைக்க வேண்டும்…” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை அதிகாரி ஏற்கனவே ஜனவரி 30-ம் தேடி சண்டிகர் துணை ஆணையரிடம் சீல் வைக்கப்பட்ட நிலையில், அவற்றை ஒப்படைத்ததாக துஷார் மேத்தா தெரிவித்தார்.
அதன்படி, “சண்டிகர் துணை ஆணையர், அந்த பதிவுகள் முழுவதையும் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடம் பாதுகாப்பு மற்றும் காவலுக்காக ஒப்படைப்பதன் மூலம் மேற்கண்ட வழிகாட்டுதலுக்கு இணங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலின் திட்டமிடப்பட்ட கூட்டம் குறித்து நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்த சிங்வி, பட்ஜெட் நோக்கங்களுக்காக இது பெரிய நிதி தாக்கங்களை ஏற்படுத்தும் என்றார்.
பின்னர், “பிப்ரவரி 7, 2024 அன்று நடக்கவிருந்த சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் அடுத்த கூட்டம், நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவ வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“