சென்னை: கோயம்பேடு சந்தையில் நேற்று (சனிக்கிழமை) காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.60, பீன்ஸ் ரூ.150, முருங்கைக்காய் ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் 2 வாரங்கள் வரை கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.24-லிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
திருவல்லிக்கேணி ஜாம்பஜார், அரும்பாக்கம், தியாகராயநகர் உள்ளிட்ட சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.80-க்கும், வியாசர்பாடி, கொடுங்கையூர் போன்ற விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 3-ம் தர சிறிய தக்காளி ரூ.60-க்கும் விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் நேற்று உயர்ந்திருந்தது. அதேபோல் முருங்கைக்காய் கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.
முள்ளங்கி ரூ.25-லிருந்து ரூ.50 ஆகவும், அவரைக்காய் ரூ.20-லிருந்து ரூ.80 ஆகவும், வெண்டைக்காய் ரூ.20-லிருந்து ரூ.30 ஆகவும், பீன்ஸ் ரூ.70-லிருந்து ரூ.150 ஆகவும், புடலங்காய் ரூ.15-லிருந்து ரூ.30 ஆகவும், முட்டைக்கோஸ் ரூ.12-லிருந்து ரூ.14 ஆகவும், கத்தரிக்காய் ரூ.10-லிருந்து ரூ.20 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் தலா ரூ.50, சின்ன வெங்காயம், கேரட் தலா ரூ.40, பாகற்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.29, பீட்ரூட் ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.24 என குறிப்பிடும்படியாக விலை மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது.
காய்கறிகள் விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, “ஆந்திரா மற்றும் கர்நாட மாநில எல்லையோர பகுதிகளில் இருந்து தான் சந்தைக்கு காய்கறிகள் வருகின்றன. அப்பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. மேலும், தற்போது அறுவடை பருவம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை உயர்ந்துள்ளது” என்றனர்.