பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோயாக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மாறி வருகிறது. எந்த வயதினரையும் பாதிக்கலாம். இதைத்தடுக்க, 11 – -12 வயதுக்கு முந்தைய குழந்தைகளுக்கு மருத்துவர்கள் எச்.பி.வி., தடுப்பூசியை பரிந்துரைக்கிறார்கள்.
இது குறித்து, நேற்று முன் தினம் கோவை வந்த சுகாதார துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறியதாவது:
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மக்களை தேடி மருத்துவத்திலும் அதை கண்டறிவதற்கான சோதனைகள் உட்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்தில், 18 பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கான தடுப்பூசிக்கான அனுமதியை, கடந்தாண்டு மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு முன்னுரிமை கொடுத்து அனுமதி வழங்க கோரியுள்ளோம். தடுப்பூசி கிடைத்தால், கண்டிப்பாக தமிழகத்தில் வயது வந்த பெண்களுக்கு வழங்கப்படும். மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.