புதுடெல்லி: ரீல்ஸ் வெறி முற்றிப்போய் சாலையில் பிணமாக நடித்து வீடியோ வெளியிட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் (23). ரீல்ஸ் விடியோக்களை வெளியிடுவதில் பிரபலமானவர் என்பதால் இவருக்கு ‘‘ரீல்ஸ் ஸ்டார்’’ என்ற புனைப்பெயரும் உண்டு. ரீல்ஸ் வெறி முற்றிப்போய் இவர் சமீபத்தில் செய்த சம்பவம் ஒன்று அவரை கம்பி எண்ண வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரபரப்பான சாலையில் பிணம் போல படுத்து பாசங்கு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் வேகமாக வைரலாகியது. பிணம் போல நடித்த முகேஷ் குமாரின் மூக்கில் பஞ்சு, கழுத்தில்மாலை, உடலில் வெள்ளைப் போர்வை போர்த்தப்பட்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பலரும் பார்த்து குழம்பிக் கொண்டிருக்க திடீரென உயிர்பெற்று எழுவதாக நடிக்கிறார். இதனைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து, பரபரப்பான சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் முகேஷ் குமாரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ ராஜேஷ் பார்தி கூறுகையில், “சாலையில் தூங்கி வீடியோ எடுத்து வெளியிட்டு பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அவர்அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளார். ரீல்ஸ் ஸ்டார் முகேஷ் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்த வீடியோவுக்கு சமூக ஊடக பயனாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொறுப்பற்ற முறையில் வீடியோ வெளியிட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து பயனாளர் ஒருவர் கூறுகையில், “ரீல்ஸ் எடுப்பவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர் என்பதை இந்த வீடியோ வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது’’ என்றார். மற்றொரு பயனாளர் கூறுகையில், “லைக், வியூஸ்களுக்காக இவ்வளவு தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவார்கள் என்று நினைக்கவில்லை’’ என்றார். ‘‘ரீல்ஸ் நோய் அதிகரித்து வருகிறது. நல்ல ரீல்ஸ் எடுக்க பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்று மற்றொருவர் பயனாளர் பதிவிட்டுள்ளார்.