Last Updated : 28 Jun, 2024 07:26 PM
Published : 28 Jun 2024 07:26 PM
Last Updated : 28 Jun 2024 07:26 PM
வருசநாடு: மயிலாடும்பாறையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழ் ஆசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் மூ.செல்வம். இவர் மன்னவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பழனிமுருகனுடன் சேர்ந்து மயிலாடும்பாறை பால்வண்ண நாதர் கோயிலில் ஆய்வு நடத்தினார். இதில் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இக்கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளர் மூ.செல்வம் கூறியதாவது: ”தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் ‘அழநாடு’ என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக இதனை பல வளநாடுகளாக பிரித்தனர். அதன் அடிப்படையில் மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலமான இன்றைய வருசநாடு வரிசை நாடு என்று அப்போது அழைக்கப்பட்டது.
இந்த வரிசைநாட்டின் மிக முக்கியமான ஊர்களில் ஒன்றாக மயிலாடும்பாறை இருந்துள்ளது. மூன்று வரிகள் கொண்ட இந்தத் துண்டு கல்வெட்டில் மயிலாடும்பாறை ஊரின் பழைய பெயர் ‘ஒரோமில்’ என்றும், அங்கு இருக்கும் இறைவனின் பெயர் ஒரோமிஸ்வரம் உடைய நாயனார் என்றும் அறிய முடிகிறது. இறைவனுக்கு, தினமும் அமுது படைப்பதற்காக நிலம் தானம் செய்யப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டில் குறிப்பிடப்படும் தொண்டைமானார் என்பவர்கள் பாண்டிய மன்னர்களின் வள நாடுகளை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள். அணுக்கிகள் என்பது பணிப்பெண்களை குறிக்கும். தினமும் பூஜைகள் செய்ய இவர்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பது கல்வெட்டு மூலம் தெரிகிறது. மயிலாடும்பாறை ஊரின் பழமையும், பாண்டிய மன்னர்களின் ஆட்சி இப்பகுதியில் செழித்து இருந்துள்ளதையும் கல்வெட்டு உணர்த்துகிறது” என்றார்.
FOLLOW US
தவறவிடாதீர்!