
பெய்ஜிங்: சீனாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து உடைந்த 49,000 பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 21ம் தேதி சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு பயணிகள் விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் 29,000 அடி உயரத்தில் நமது அண்டை நாடான சீனாவில் விழுந்து நொறுங்கியது. விமானம் நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 132 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் விமானத்தின் இடிபாடுகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட இரண்டு கருப்புப் பெட்டிகளும் பெய்ஜிங்கில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சீன விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விமானப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் சூ தாவோ நேற்று கூறியதாவது:
பல நாள் மீட்பு பணியின் போது விமானத்தின் இன்ஜின் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2.63 லட்சம் சதுர அடி நிலம் தோண்டப்பட்டு அதில் இருந்து விமானத்தின் உடைந்த 49 ஆயிரத்து 117 பாகங்கள் மீட்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
விளம்பரம்