
சாண்டோ சின்னப்பா தேவர், தனது நண்பர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாக்க நினைத்த படம், ‘நீலமலைத் திருடன்’. அவருக்குப் பொருத்தமான கதை இது. ஆனால், எம்.ஜி.ஆர் அப்போது தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ உட்பட சில படங்களில் பிசியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆர்.ரஞ்சனை நாயகனாக்கி, தேவர் உருவாக்கிய படம் ‘நீலமலைத் திருடன்’.
‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் தனக்கு வேறு ஒருவரின் குரலை ‘டப்’ செய்து தேவர் வெளியிட்டது தொடர்பாக, எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஊடல் ஏற்பட்டிருந்த காலம் அது. அதனால் ரஞ்சனை ஹீரோவாக நடிக்க வைத்ததில் எம்.ஜி.ஆருக்கு வருத்தம் என்பார்கள். (பிறகு எம்.ஜி.ஆர் நடித்த ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தர்மம் தலைகாக்கும்’ என்று பல வெற்றிப் படங்களை எடுத்த தேவர், நட்பைக் கடைசி வரை தொடர்ந்தார்).