
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுற்றுலா வழிகாட்டிகளின் அடையாள அட்டையை சுற்றுலாத்துறை புதுப்பிக்காததால், தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வழிகாட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 72 சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். கிரிமினல் வழக்கு இல்லை என போலீசார் தடையில்லா சான்றிதழ் அளித்த பின், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இத்துறையின் அடையாள அட்டை புதுப்பிக்கப்படும்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் இது வழங்கப்படவில்லை. தற்போது சுற்றுலாத்துறை பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இதுவரை புதிய அடையாள அட்டை வழங்கவில்லை. துறையின் தற்காலிக அனுமதி கடிதம் பெற்று அனைத்து கோவில்களுக்கும் சுற்றுலா வழிகாட்டியாக செல்கின்றனர். மீனாட்சியம்மன் கோவிலில் மட்டும் கோவில் நிர்வாகமும், காவல் துறையும் அனுமதி மறுக்கின்றன.
புதிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என கூறப்படுவதால், சுற்றுலா பயணிகள் கோயிலின் வரலாறு மற்றும் பெருமையை எடுத்துரைக்க வழியில்லை. வழிகாட்டிகளும் வருமான இழப்பை சந்திக்கின்றனர். வழிகாட்டிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்
விளம்பரம்