
சென்னை: புழல் சிறையில் கஞ்சா விநியோகம் நடப்பதாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி கூறினார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே கட்சிக் கொடிக் கம்பம் போலீஸாரால் அகற்றப்பட்ட சம்பவத்தில், அதிகாரிகள் மற்றும் பொக்லைன் வாகனம், ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக, பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, ஜாமீன் கோரி அமர்பிரசாத் ரெட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்து அமர்பிரசாத் ரெட்டி, பாஜக சென்னை கிழக்கு மாவட்ட ஐ.டி. பிரிவு தலைவர் சுரேந்திரன், நிர்வாகிகள் செந்தில், வினோத், பாலா, கன்னியப்பன் ஆகிய 6 பேரும் ஜாமீனில் நேற்று வெளியே வந்தனர்.
இவர்களுக்கு தி.நகரில் உள்ளபாஜக தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமர்பிரசாத் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 22 நாட்களாக சிறையில் இருந்த நாங்கள் வெளியே வந்ததற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோர்தான் காரணம். நீதித்துறையில் உண்மைக்கும், தர்மத்துக்கும் எப்போதும் வெற்றி உண்டு.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்க்கட்சி பாஜகதான் என்பது தெளிவாகிறது. 2026-ல் திமுகவை வீழ்த்தி, தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். முதல்வர் யாரென்று உங்களுக்கே தெரியும்.
சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட என்னை, சிறையில் உள்ளமருத்துவ மையத்தில் கூட சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை. மருத்துவரும் என்னை வந்து பார்க்கவில்லை. புழல் சிறையில் இருக்கும் மருத்துவ மையத்தில் என்ன நடக்கிறது என்பதுதொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிறையில் இருப்பவருக்குஅதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், புழல் சிறையில் கஞ்சாவிநியோகம் நடக்கிறது. சிறையில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வெளியிட சிறைத் துறை டிஜிபிக்கு தைரியம் இருக்கிறதா?
இவ்வாறு அவர் கூறினார்.