
சென்னை: சென்னையில் சென்ற ஆண்டு தீபாவளி காற்றுத் தர மாசின் அளவைவிட நடப்பு ஆண்டு தீபாவளி காற்றின் மாசு அளவு 40 விழுக்காடுகள் (AQI) குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றூம் ஒலி மாசு அளவையும் கண்டறிய பெருநகர சென்னை மாநகரத்தில் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுக்கார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உச்ச நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 15 நாட்களுக்கு (தீபாவளிக்கு 7 நாட்கள் முன்பு, தீபாவளி அன்று மற்றும் அதன் பின்னர் 7 நாட்கள்) காற்று மாசு காரணிகளின் அளவுகளைக் கண்காணித்து வருகிறது. மேலும் ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் மற்றும் தீபாவளிக்குப் பின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தீபாவளிப் பண்டிகைக்கு முன் அதாவது 6.11.2003 அன்று குறைந்த அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 52.3 டெசிபள் ஆகவும், அதிக அளவாக ஒலி மாசு 64.7 டெசிபளாகவும் கண்டறியப்பட்டது. மேலும் தீபாவளி அன்று குறைந்த அளவாக ஒலி மாசு தியாகராய நகரில் 60.5 டெசிபளாகவும், அதிகபட்ச அளவாக ஒலி மாசு வளசரவாக்கத்தில் 83.6 டெசிபளாகவும் அறியப்பட்டுள்ளது. ஆகையால், தீபாவளி அன்று கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள் வரையறுக்கப்பட்டு தேசிய சுற்றுப்புற ஒலி மாசுபாட்டின் அளவுகளைவிட அதிக அளவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பெசன்ட் நகரில் குறைவு, வளசரவாக்கத்தில் அதிகம்: தீபாவளி நாளன்று காற்றுத் தர குறியீட்டு அளவு காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 207-ல் இருந்து 365 வரை (மிக மோசமான அளவுகள்) எனக் கண்டறியப்பட்டது. குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும், அதிகளவாக வளசரவாக்கத்தில் 365 AQI ஆகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணிகளாக பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளை வெடித்ததாலும் மேலும் காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றில் மிகக் குறைந்த வேகமும் ஆகும். மேற்கூரிய வானிலை காரணிகளும் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை, வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழல்நிலை அமையவில்லை.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாவட்ட ஆட்சியாளர்கள் மாநகராட்சி ஆணையாளர்கள் காவல்துறை பள்ளிக் கல்லூரி மாணவர்கள், செய்தி மற்றும் ஊடகங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சென்ற ஆண்டு தீபாவளி காற்றுத் தர மாசின் அளவைவிட நடப்பு ஆண்டு தீபாவளி காற்றின் மாசு அளவு 40 விழுக்காடுகள் (AQI) குறைந்துள்ளது என்பது மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.