இந்திய பிரதமர் நரேந்திர மோதி அயோத்தியில் ராமர் கோவிலை திறந்து வைத்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில், இன்று அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலை திறந்து வைத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலுக்கான நிலம், அந்நாட்டு அதிபர் ஷேக் முகமத் பின் சயீத் அல் நஹ்யானால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், இந்த கோவில் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோதிக்கு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இது இந்திய பிரதமராகி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் செல்லும் 7வது பயணமாகும். இங்கு முதல் பயணமாக ஆகஸ்ட் 16, 2015 அன்று வந்திருந்தார் மோதி.
1981ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, 43 ஆண்டுகள் எந்த இந்தியா பிரதமரும் இங்கு செல்லவில்லை. அதற்கு பின் நரேந்திர மோதிதான் இங்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தில் , நரேந்திர மோதி ஐக்கிய அரபு அமீரக அதிபரோடு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதில் சமீபகாலத்தில் இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று, இந்திய வம்சாவளியை சேர்ந்த அறுபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் முன் உரையாற்றியுள்ளார் பிரதமர் மோதி.
மோதியின் உத்தி
இதனை தொடர்ந்து துபாயில் நடைபெறும் உலக அரசாங்க உச்சி மாநாடு 2024 இல் கலந்து கொண்டுள்ளார்.
இந்தியாவை தவிர துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளன. அபு முரீகாவில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் மோதி திறந்து வைத்துள்ளார்.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் 50 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம், குஜராத் வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் , பிரதமர் மோதியுடன் பேரணியில் கலந்து கொண்டார். இந்நிலையில் மோதியின் இந்த பயணம் மதம், அரசியல் மற்றும் முதலீடு என அனைத்து நோக்கங்களையும் உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அப்துல்நாசர் அல்ஷாலி, “ பிரதமர் மோதியின் இந்த பயணம் சகிப்புத்தன்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் தன்மைகளுடன் தொடர்புடையதாக ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது. இந்த விழுமியங்களே நமது இருதரப்பு உறவுகளுக்கு வழிகாட்டுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மதம் இஸ்லாம். மறுபக்கம் நரேந்திர மோதியின் ஆட்சியின் கீழ் இந்திய இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம் குறித்தான கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.
இருப்பினும் , இவை அனைத்தையும் கடந்து சமீப காலமாகவே இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவு ஆழமாகி வருகிறது.
புவிசார் அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம், அதன் வேகமான பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களினாலேயே ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமத் பின் சயீத் அல் நஹ்யானை தனது சகோதரர் என்று அழைத்துள்ளார் பிரதமர் மோதி. ஐக்கிய அரபு அமீரகம் 2019ஆம் ஆண்டு, தங்கள் நாட்டின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் சயீத்’ விருதை நரேந்திர மோதிக்கு வழங்கி சிறப்பித்தது.
பிரதமர் மோதி திறந்து வைத்த கோவிலின் தலைமை பூசாரியான பிரம்ம விஹாரிதாஸ் சுவாமி, “இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இதற்கு முன்பு இவ்வளவு உறுதியானதாக இருந்ததில்லை” என்று கூறியுள்ளார்.
மோதியின் அரசியல் பின்புலம்
இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இரு நாட்டு உறவில் மோதியின் இந்துத்துவ முகம் குறுக்கிடாமல் இருப்பது எப்படி?
இந்த கேள்வியை சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளுக்கு இந்தியாவின் தூதராக இருந்த தல்மீஸ் அகமதுவிடம் கேட்டோம்.
இதற்கு பதிலளித்த அவர், “ஐக்கிய அரபு அமீரகத்தை பொருத்தவரை பூர்வீக மக்களின் எண்ணிக்கை 10 முதல் 12 சதவீதம் தான். மீதமுள்ளவர்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள். இதுபோன்ற சூழலில் அந்த மக்களிடம் இருந்து எந்த அழுத்தமும் அரசுக்கு வருவதில்லை” என்கிறார்.
மேலும் பேசிய அஹ்மத், “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அதுவும் தற்போது அந்தப் போக்கு நிறையவே அதிகரித்துள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. காரணம் அங்கு முடியாட்சி அமைப்பு உள்ளது. அது வெளியுறவுக் கொள்கையில் அதன் நலன்களை மட்டுமே முதன்மையாக வைத்திருக்கிறது. எனவே இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் நடப்பவைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று கூறுகிறார்.
பூர்வீக மக்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை சேர்த்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய மக்கள் தொகை கிட்டத்தட்ட 1 கோடியாகும். இந்த எண்ணிக்கையில் வெறும் 10 லட்சம் பேர் மட்டுமே அந்நாட்டின் குடிமக்கள்.
மீதமுள்ளவர்கள் 200 நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். அதில் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 35 லட்சம் இந்தியர்கள் அங்கு வாழ்கின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் இந்தியர் ஆவர்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏன் இந்தியாவை பிடிக்கிறது?
இதுகுறித்து பேசிய தல்மீஸ் அகமது. “ இந்திரா காந்தி 1981ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தார். ஆனால், அது பனிப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். இந்தியா தன்னை எந்த அணியிலும் இணைத்துக் கொள்ளவில்லை. அதுபோன்ற சூழலில் இந்தியாவிற்கு வெளியுறவு கொள்கை சிக்கலானதாக இருந்தது. எனவே, அந்த நேரத்தில் இந்திரா காந்தியால் பெரியளவு வெற்றி பெற முடியவில்லை.”
“தற்போதோ மோதி பிரதமராகி 8வது முறையாக அங்கு செல்கிறார். உலகமும் பெரியளவு மாறிவிட்டது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவும் வரலாற்றுப்பூர்வமாக சிறப்பானதாக உள்ளது. இதற்கு நாம் கண்டிப்பாக மோதிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்” என்கிறார்.
நரேந்திர மோதியோ இந்துத்துவ அரசியலை சேர்ந்தவர். அவரது இந்த சார்பு வளைகுடாவை சேர்ந்த இஸ்லாமிய நாடுகளுக்கு பிரச்னையாக தெரியவில்லையா?
இதற்கு பதிலளித்த தல்மீஸ் அகமது, “ஒட்டுமொத்த உலகமும் கொந்தளிப்பில் உள்ளது. மேற்குலகம் பேசி வரும் விழுமியங்கள்(values) குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனித உரிமைகள் மற்றும் மத சார்பற்ற விழுமியங்களை ஆதரிக்கும் இதே மேற்குலகம் தான் கப்பல்துறையிலும் உள்ளது. இந்நிலையில், வளைகுடா நாடுகள் இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக நலன்களை ஏற்படுத்தும் உறவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, உள்நாட்டு அரசியலில் கவனம் செலுத்தும் என்று சொல்ல முடியாது.”
“இதே ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலை அங்கீகரித்து இருநாட்டு ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது. அங்கு இதற்கு எதிராக எந்த எதிர்வினையும் எழவில்லை. காரணம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 10 சதவீத மக்கள் இதற்கு எதுவும் செய்ய முடியாது.”
கார்னகி எண்டோவ்மென்ட் என்ற சிந்தனைக் குழுவைச் சேர்ந்தவரும், அபுதாபியின் முன்னாள் மேற்கத்திய தூதராகவும் இருந்த ஒருவர், “மோதியின் நடைமுறை அரசியல் மனப்பான்மையும், வலிமையான தலைவராக இருக்கும் அவரது பாணியும் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர்களுக்கு பிடித்துள்ளது” என்று கூறுகிறார்.
இந்துத்துவா முகம்
ஆகஸ்ட் 2019இல் கார்னகி எண்டோவ்மென்ட் சிந்தனைக் குழு வெளியிட்ட அறிக்கையில், “ முதலில் அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளுடனான உறவை முன்னெடுத்து செல்வதில் நரேந்திர மோதியின் அரசியல் பின்புலம் ஒரு தடையாக இருக்கும் என்றே பார்க்கப்பட்டது. காரணம் மோதி இந்து தேசியவாதத்தின் தீவிரமான ஆதரவாளர். 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பின் மோதியின் சர்வதேச செல்வாக்கும் பாதிக்கப்பட்டது. அந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டனர்.”
“ஆனால் வளைகுடா நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மோதியை இந்த கோணத்தில் பார்க்கவில்லை. மோதியின் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறை, இஸ்லாமிய அரசியல் குறித்த இருநாட்டு தலைவர்களின் கருத்துகளோடும் பொருந்தி போகிறது. 2019 பிப்ரவரி, புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்துகொண்ட சவுதி பட்டத்து இளவரசர் நரேந்திர மோதியை தனது மூத்த சகோதரர் என்று அழைத்தார்.”
கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், ‘மோதி அரசு தனது இந்துத்துவா அடையாளத்தை முன்னிறுத்தினாலும், எப்படி பாகிஸ்தானுக்கு நெருக்கமாகக் கருதப்பட்ட நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் நெருக்கமாக முடிந்தது? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெய்ஷங்கர், “ இந்த இஸ்லாமிய நாடுகள் மோதி அரசை உண்மையான இந்தியருடையதாக பார்க்கின்றன. நாம் நமது கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளோடு இணைந்திருப்பதையும், அது குறித்து பெருமைப்படுவதையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
அவர்களை பொருத்தவரை நாம் நம்மை என்னவாக காட்டிக்கொள்கிறோமோ அதுவாகவே இருக்கிறோம். இதுவே நம் மீது வளைகுடா நாடுகளுக்கு மரியாதையை ஏற்படுத்துகிறது. அவர்களும் தாங்கள் யார் என்பதில் பெருமையாக உணர்கிறார்கள். எனவே, தான் இந்தியன் என்பதற்காகவே பெருமைப் பட்டுக்கொள்ளும் மோதியின் தலைமையில் இந்தியாவை பார்க்கும் போது, அவர்கள் நம்மோடு மிக நெருக்கமாக உணர்கின்றனர்” என்று கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே கோவில்கள் உள்ளன
பீகாரின் அவுரங்காபாத்தை சேர்ந்த ஷியாம்குமார் துபாயில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார்.
அபுதாபியில் கோவில் திறந்து வைக்கவரும் பிரதமர் மோதி குறித்து பேசிய அவர், “ ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் ஒன்றும் முதல் கோவில் அல்ல, ஏற்கனவே துபாயில் இரண்டு கோவில்கள் உள்ளன” என்று தெரிவிக்கிறார்.
இரண்டு கோவில்களும் துபாயில் உள்ளன. ஆனால் அவற்றின் கட்டிடம் கோவில் வடிவத்தில் கிடையாது. 2022 இல், கிருஷ்ணர் கோவில் துபாயில் உள்ள ஜெபல் அலிக்கு மாற்றப்பட்டது. ஜெபல் அலியில் ஒரு தேவாலயம் மற்றும் குருத்வாரா உள்ளது.
இதுகுறித்து ஷியாம் பேசுகையில், “இந்த கோவிலின் சிறப்பே அதன் பிரமாண்டம் தான். இந்த கோவில் நாராயணர் கடவுளுக்காக கட்டப்பட்டுள்ளது மற்றும் அங்கு நிறைய பணமும் உள்ளது. இதுபோன்ற சூழலில் அது திறக்கப்படுவதற்கு முன்பே அதன் மகத்துவம் பேசுபொருளானதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஓமன் மற்றும் பஹ்ரைனிலும் இந்து கோவில்கள் உள்ளன. துபாயில் அதிகளவிலான ஜெயின் மக்களும் உள்ளனர். அவர்கள் தங்களது வீட்டின் ஒரு தளத்தையே கோவிலாக மாற்றி வைத்துள்ளனர். நரேந்திர மோதி பிரதமரான பிறகு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவு வலுப்பெற்றுள்ளதாக நான் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் நிலவி வரும் மத அரசியல் சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏதேனும் எதிர்வினைகள் உள்ளதா என்ற கேள்விக்கு, “ ஐக்கிய அரபு அமீரகத்தில் முடியாட்சி நடைபெற்று வருகிறது. ஊடங்கங்களுக்கும் கட்டுப்பாடு உள்ளது. 1 கோடி மக்கள் தொகையில், வெறும் 10 லட்சம் பேர் மட்டுமே இந்நாட்டு குடிமக்கள்”
“90% மக்கள் புலம்பெயர்ந்தவர்கள். இங்கு அனைவரும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இங்கு அரசியல் மட்டும் வெளியுறவு கொள்கை என இரண்டுமே வணிகத்தை சார்ந்துள்ளதே தவிர, இந்தியாவின் இந்து-முஸ்லீம் பிரச்னை சார்ந்து அல்ல. இந்தியாவுடனான உறவு என்பது வணிகம் மற்றும் பொருளாதாரம் மட்டுமே” என்று கூறுகிறார் ஷியாம்.
இந்தியா – ஐக்கிய அரபு அமீரக வணிக உறவுகள்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையிலான இருதரப்பு வணிகம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
1970களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வருடாந்திர வணிகமே 180 மில்லியன் டாலர்கள் என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால், தற்போது அது 85 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
2021 – 2022 காலகட்டத்தில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து ஐக்கிய அரபு அமீரகமே இந்தியாவின் மூன்றாவது வணிக கூட்டாளியாக இருந்தது.
2022 – 2023இல் அமெரிக்காவிற்கு அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கே இந்தியா அதிக ஏற்றுமதிகளை செய்துள்ளது. அதன்படி இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 31.61 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியை செய்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, FDI அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகமே இந்தியாவின் ஏழாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது.
முக்கியமாக பெட்ரோலியப் பொருட்கள், விலை மதிப்பு மிக்க உலோகங்கள், கற்கள், நகைகள், கனிமங்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள், பொறியியல் மற்றும் இயந்திர தயாரிப்புகளை இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவிற்கு பெரியளவில் எண்ணெய் வழங்குபவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தில் உள்ளது. அதே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகம் எல்பிஜி மற்றும் எல்என்ஜி வழங்குவதில் இந்தியா இரண்டாமிடம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். 2022இல் மட்டும் இவர்கள் 20 பில்லியன் டாலர்கள் வருவாயை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அங்கிருந்து பணம் அனுப்புவது அதிகரித்து கொண்டே இருக்கிறது. 1970, 80 கள் காலகட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய 80 முதல் 90% இந்தியர்கள் கடைநிலை ஊழியர்களாக மட்டுமே இருந்தனர். ஆனால், தற்போதோ நிலைமை மாறிவிட்டது. இப்போது அங்கு பணிபுரியும் 35% இந்தியர்கள் அலுவலக பணிகளில், உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர்.